தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025 காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில் 38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raulin, Préfète du Lot) கருத்து தெரிவிக்கையில், காயங்களுக்குள்ளான அனைவருக்கும் சிறு காயங்கள் (Blessures légères) ஏற்பட்டிருந்தாலும் ஒரு சில மாணவர்களுக்கு கால் எலும்பு முறிவு (Fracture à la jambe) உள்ளிட்ட பலத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாததை நினைத்து நாம் மகிழ்ச்சியடையலாம் எனத்தெரிவித்துள்ளார்.
பேருந்தில் பயணித்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் விபத்து குறித்து தெரிவிக்கையில், அசியா (Assya) என்ற 15 வயது சிறுமி, "பேருந்து திடீரென நடுங்கியது, எங்கோ ஒரு மரத்தில் மோதியது போல் தோன்றியது. எல்லா இடத்திலும் அழுகுரல்கள் கேட்டன.
அனைவரும் பதட்டத்தில் இருந்தனர்" என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதே போல், ரோமெயின் வெசைன் (Romain Vezine) என்ற பிள்ளையின் பெற்றோர் தெரிவிக்கையில், "என்னுடைய மகள் அதிர்ச்சியில் இருந்தாள்" என்று கூறியுள்ளார்.
விபத்து அனுபவத்தின் அதிர்ச்சியில் இருக்கும் மாணவர்களின் உடல், உள நிலையை ஆரோக்கியமாக பாதுகாக்க, லாகாப்பெல்லி (Lacapelle) பகுதியில் உள்ள பாலிவலென்ட் அரங்கில் (Salle polyvalente) மருத்துவ-மனோவியல் அவசர உதவி(Cellule d'urgence médico-psychologique) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவியளிக்க, கஹோர்ஸ் நகராட்சி (Mairie de Cahors), கிராண்ட் கஹோர்ஸ் (Grand Cahors) மற்றும் ரேனால் (Raynal) நிறுவனம் ஆகியவை கைகோர்த்துள்ளனர்.
இந்த விபத்தின் போது சுமார் 40 பேர் கொண்ட பிரான்ஸ் (French) தீயணைப்பு வீரர்கள் (Pompiers) மற்றும் SMUR (Service Mobile d'Urgence et de Réanimation) ஒன்றிணைந்து களத்தில் விரைவாக செயற்பட்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விபத்துக்கும் பேருந்து சாரதிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை, 25 வருட அனுபவம் கொண்ட சாரதி விபத்து நிகழ்ந்த போது மது அல்லது போதைப்பொருள் எதையும் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அவரது முகத்திலும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆக இது தற்செயலான விபத்து என கஹோர்ஸ் நகர மேயர் ஜென்-லூக் மார்க்ஸ் (Jean-Luc Marx) தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளில் இருந்து பேருந்தில் இருந்த தொழிநுட்ப கோளாறுகள் விபத்துக்கு வழி வகுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படடும் நிலையில் கஹோர்ஸ் நீதிமன்ற நீதிபதி கிளாரா ரிபெய்ரோ (Clara Ribeiro, Procureure de la République de Cahors) தலைமையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment