Skip to main content

கோழையின் காதல் - சிறுகதை

 இந்தா இந்த காப்பு ரெண்டையும் போடு… உனக்கு ஒன்டும் போடாம வெளிக்கிடுத்தி கொண்டு வந்திருக்கிறன் என்டு உன்ர கொப்பர் என்னை தான் திட்டுவார்.. கெதியா வெளிக்கிடு…’ என்று அவசரப்படுத்திவிட்டு போகும் தாயை பார்க்க எரிச்சலாக இருந்தது அவளுக்கு. காத்திருந்து அவரசமாக கன்னத்தில் விழுந்து கரை புரண்டோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டு தாய் கொடுத்த வளையல்களை எடுத்து கையில் மாட்டினாள் அவள்.

அவளுடைய பெரியம்மாவின் மகளின் திருமணம் இன்று. வீட்டில் எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். பல மாதங்களாக இந்த திருமண நாளிற்காக அவள் கூட காத்திருந்தாள்தான். அக்காவின் திருமணம் என்றால் அது பெரிய கொண்டாட்டம் தானே? திருமண பேச்சுதொடங்கிய நாளிலிருந்து ஒரே கொண்டாட்டம் தான்.

ஆனால் இன்று அங்கு போகும் மனநிலை இல்லை அவளுக்கு. கையினுள் நுழைய மறுக்கும் வளையலை அழுத்தி தள்ளினாள், அந்த மெல்லிய வளையல் அவள் அழுத்திய வேகத்தில் சற்று நெளிந்து கையின் மணிக்கட்டை கீறியது.. ‘ஸ்ஸ்ஸ்…’ என்று கையை உதறியபடி கண்ணாடிமுன்னால் கிடந்த கதிரையில் அமர்ந்தாள்.

தொண்டைக்குழியில் நெருப்பால் சுட்டது போல் ஓர் வலி, கண்கள் எரிந்து கொண்டு பொறுமையிழந்த கண்ணீர் வெளியே கொட்டியது. விம்மி விம்மி அழுதாள். அழுகையை அடக்க முடியவில்லை.

மகளை இன்னும் காணவில்லை என்று தேடி வந்த அவளது தாய் அவள் அழுவதை பார்த்துவிட்டு அருகில் ஓடிவந்து ‘என்னடி பிள்ள ஏன் அழுறாய்..’ என்று பதட்டத்தோடு கேட்கவும், அவளுக்கு பேச்சு வரவில்லை, அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒன்றும் சொல்லாமல் விம்மி விம்மி அழும் மகளை பார்க்க அவள் தாய்க்கு பயமாக இருந்தது. அப்போதுதான் மகளின் கையை கவனித்தாள். வளையல் நெளிந்து கையிலும் கீறி ரத்தம் காய்ந்து போயிருந்தது.

மகள் அழுவதற்கான காரணம் தெரியவும் ஒரு பெருமூச்சோடு ‘என்ன விசரடி உனக்கு… இதுக்கே உப்பிடி அழுறாய்.. இஞ்ச கொண்டுவா அந்த காப்பை… இதை நீ போட வேண்டாம்.. கண்ணை துடைச்சிட்டு கெதியா வா… அப்பா வெளிக்கிட்டார்..’ என்று சொல்லி அவளின் கையிலிருந்த வளையல்களை வாங்கிக்கொண்டு மகளின் தலையை வருடிவிட்டு போனாள் அவள் தாய்.

அந்த வளையல் கீறியதற்காகவா அவள் அழுகிறாள்? கையில் காய்ந்த அந்த ஒரு சொட்டு இரத்தம் அந்த அழுகைக்கு காரணமில்லை.. அவள் மொத்த இரத்தத்தையும்; உறையவைத்துவிட்டு உயிர்பிரிந்து போய்விட்ட அவள் காதல்தான் காரணம்.

இன்று அவள் காதலனின் இறுதி பயணம் உயிர் பிரிந்த அவனது உடல் ஆறடி மண்ணை நோக்கிபோகும் நேரம் நெருங்கி கொண்டிருந்தது. ஆசை ஆசையாய் ரசித்து காதலித்த அவன் முகத்தை கடைசி நொடி கூட பார்க்க வாய்க்காமல் அலங்கரித்துக்கொண்டு அமர்ந்திருந்து அழுது கொண்டிருக்கிறாள் அவள்.

யாரிடம் சொல்ல முடியும்? அவள் ஐந்து வருடமாக காதலித்தவன் இறந்து விட்டான் என்று. அவள் அப்பாவிற்கு இதெல்லாம் பிடிக்காது சின்ன சின்ன விசயங்களுக்கு கூட ‘மானம் போச்சு மரியாதை போச்சு நான் தூக்கில் தொங்க போகிறேன்’ என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார். அப்படி இருக்கையில் தான் ஐந்து வருடமாக ஒருவனை காதலித்தேன் என்றோ அல்லது அவன் இன்று ஒரு விபத்தில் இறந்து விட்டான் அவனை போய் வழியனுப்பி வைத்துவிட்டு வருகிறேன் என்றோ எப்படி தகப்பனிடம் அவளால் சொல்ல முடியும்?

அவள் ஒரு பிறவிக் கோழை அல்லவா? அந்த கோழைப் பெண்ணின் தைரியம் அவன் தானே? அந்த தைரியத்தை இன்னும் சில நேரத்தில் மண்ணோடு போட்டு புதைக்க போகிறார்கள்.

அதை நினைத்து உச்சி வெயிலில் மணலில் விழுந்த புழுவாய் துடித்து குமுறிக்கொண்டிருந்தாள். ஐயோ… இப்போதே இந்த உயிர் போனால் என்ன என்று இருந்தது அவளுக்கு. கடைசியாக என்றாலும் ஒருமுறை அவன் முகத்தை பார்க்க வேண்டும் என்ற ஏக்கமும் தவிப்பும் அவளை வாட்டியது.

எப்படி போவது? தகப்பனிடம் என்ன சொல்லிவிட்டு வீட்டிலிருந்து போவது? அங்கு போய் அவனை அந்த கோலத்தில் பார்த்ததும் தன்னை எப்படி கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் அவளால்? என்ன உரிமையில் அவனை தொட்டு தழுவி அவனுக்கு விடை கொடுப்பது?

இறுதியாக அவளை சந்தித்துவிட்டு போகும் போது கூட திரும்பி நின்று பாத்து புன்னகைத்து விட்டுபோனானே அதை நினைக்க அவளுக்கு வாய்விட்டு கத்தி அழ வேண்டும் போல் இருந்தது. அப்பவே சொன்னானே.. வீட்டில் சொல்லுவோம்… என்ன நடந்தாலும் நான் பாத்துக்குவேன் என்று… நான்தானே ஒவ்வொரு முறையும் பயத்தில் வேண்டாம் வேண்டாம் என்றேன்.. பாவி.. நான்.. இன்டைக்கு உரிமையோட அழக்கூட இல்லாம போச்சோ..’ என்று அவள் மனது புலம்பியது.

அவனை நினைக்க நினைக்க கண்கள் இருட்டிக்கொண்டு மயக்கம் வந்தது அவளுக்கு. மேலே நிமிர்ந்து பார்த்தாள் சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறியை. ‘அவனோடு போய்விடு… அவன் இல்லாமல் உன்னால் வாழ முடியாது..’ என்றது அவள் மனம்.

வேகமாக எழுந்து அலுமாரியை திறந்து சேலை ஒன்றை எடுத்துக்கொண்டு திரும்பவும் கதவை திறந்து கொண்டு அவள் தங்கை உள்ளே ஓடி வந்தாள். ‘அக்கா வாடி.. நேரம் போயிட்டு.. அப்பா அம்மா தம்பி எல்லாரும் வெளிக்கிட்டாங்க.. நீ தான் லேட்..’ என்றாள் சிரித்துக்கொண்டு.

‘ஐயோ…’ என்றிருந்தது அவளுக்கு. புன்னகையோடு நிற்கும் தங்கையை பார்க்க குற்ற உணர்ச்சி அவளைக் கொன்றது. ‘நான் இதை செய்தால் நாளை என் தங்கை தம்பியின் எதிர்காலம் என்னவாகும்…? என் பெற்றோரின் நிலை? சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் செத்துவிடுவேன் என்று மிரட்டும் அப்பாவின் நிலை? நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருந்தது அவளுக்கு.

கண்ணை துடைத்துக்கொண்டு வெளியே போனாள். ‘என்னடி உது? கண் சிவந்துபோய் வீங்கிகிடக்கு? அழுதனியோ..? என்றாள் தாய்.

தொண்டையை செருமிக்கொண்டு ‘அது பௌடர் போடும் போது ப்ரஸ் கண்ணுல குத்திட்டு அம்மா.. கண்ணீர் நிக்கிதே இல்லை..’ என்றாள் தளதளத்த குரலில்.

‘சரி சரி பிறகு வந்து ஆஸ்பத்திரிக்கு போகலாம்.. கெதியா வெளிக்கிடு…’ என்ற தந்தையின் கடுமையான குரலில் எல்லை மீறிய அவள் கண்ணீர் கன்னத்தில் விழாது கண்களுக்குள்ளேயே தேங்கியது.

கண்ணை நெருடும் தூசியை துடைக்கும் பாவனையில் மனதை நெருடும் அவன் நினைவுகளால் ஓயாமல் ஒழுகும் கண்ணீரை துடைத்தபடி பெற்றோரின் பின்னால் நடந்தாள் அவள்.

–முற்றும்–

நூலாசிரியர்: சபீனா சோமசுந்தரம் 

Comments

Popular posts from this blog

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பாரிஸ்: பிரபல விடுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை!

  பரிஸ் (Paris), செப்டம்பர் 22, 2025  உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான பாரிஸ்(Paris) நகரின் லியோன் (Gare de Lyon) ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள 12வது வட்டாரத்தில் (12th Arrondissement) உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் 19 வயது யுவதிக்கு பாலியல் ரீதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை பாரிஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  பாரிஸ் நகரின் 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மிகப்பிரபலான ரூஃப்டாப் மதுபான விடுதி (Rooftop Bar)-யின் அடித்தளத்தில் (Basement) இந்த பயங்கர சம்பவம் நிகந்துள்ளது. சம்பவ தினமான  20 செப்டம்பர் 2025 சனிக்கிழமையன்று அதிகாலை நான்கு மணியளவில் சம்பவம் இடம்பெற்ற குறித்த விடுதியில் இருந்து காவல்துறையினருக்கு பாலியல் அத்துமீறல் தொடர்பில் புகாரளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை மீட்டு பாதுகாப்பளித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து பாதிக்கப்பட்ட பெண் மதுபான விடுதி ஊழியர் (Bar Employee) ஒருவரால் ஏமாற்றப்பட்டு அடித்தளத்தில் (Basement)இ...